Tirukkuṛaḷ - திருக்குறள்

Friday, August 14, 2020

Tirukkural - குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: வான்சிறப்பு.

 குறள் 18:

"சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு."

மு.வரதராசனார் உரை:

மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது.

சாலமன் பாப்பையா உரை:

மழை பொய்த்துப் போனால் தெய்வத்திற்குத் தினமும் நடக்கும் பூசனையும் நடக்காது; ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாவும் நடைபெறாது.

பரிமேலழகர் உரை:

வானோர்க்கும் ஈண்டுச் சிறப்போடு பூசனை செல்லாது - தேவர்கட்கும் இவ்வுலகில் மக்களால் செய்யப்படும் விழவும் பூசையும் நடவாது; வானம் வறக்குமேல் - மழை பெய்யாதாயின் (நைமித்திகத்தோடு கூடிய நித்தியம் என்றார் ஆகலின் 'செல்லாது' என்றார். 'உம்மை' சிறப்பு உம்மை. நித்தியத்தில் தாழ்வு தீரச் செய்வது நைமித்திகம் ஆதலின், அதனை முற்கூறினார்.)

மணக்குடவர் உரை:

சிறப்புச் செய்யப்படுகின்ற விழவு பூசனை நடவாது, வானம் புலருமாகில் தேவர்களுக்கும் இவ்வுலகின்கண். மழைபெய்யாக்கால் வருங் குற்றங் கூறுவார் முற்பட நான்குவகைப்பட்ட அறங்களில் பூசை கெடுமென்றார்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

மழை பெய்யாவிட்டால் வானவர்களுக்கும்  இவ்வுலகில் நடைபெறுகின்ற சிறப்பான திருவிழாவோடு கூடிய பூசையும் நடக்காது.

Translation:

If heaven grow dry, with feast and offering never more, Will men on earth the heavenly ones adore.

Explanation:

If the heaven dry up, neither yearly festivals, nor daily worship will be offered in this world, to the celestial.

No comments:

Post a Comment