Tirukkuṛaḷ - திருக்குறள்

Friday, August 14, 2020

Tirukkural - குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: வான்சிறப்பு.

 குறள் 19:

"தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்."

மு.வரதராசனார் உரை:

மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும்.

சாலமன் பாப்பையா உரை:

மழை பொய்த்துப் போனால், விரிந்த இவ்வுலகத்தில் பிறர்க்குத் தரும் தானம் இராது; தன்னை உயர்த்தும் தவமும் இராது.

பரிமேலழகர் உரை:

வியன் உலகம் தானம் தவம் இரண்டும் தங்கா - அகன்ற உலகின்கண் தானமும் தவமும் ஆகிய இரண்டு அறமும் உளவாகா; வானம் வழங்காது எனின் - மழை பெய்யாது ஆயின். (தானமாவது அறநெறியான் வந்த பொருள்களைத் தக்கார்க்கு உவகையோடும் கொடுத்தல்; தவம் ஆவது மனம் பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு விரதங்களான் உண்டி சுருக்கல் முதலாயின. பெரும்பான்மை பற்றித் தானம் இல்லறத்தின் மேலும், தவம் துறவறத்தின் மேலும் நின்றன.).

மணக்குடவர் உரை:

தானமும் தவமுமாகிய விரண்டறமு முளவாகா; அகன்ற வுலகத்துக்கண் மழை பெய்யாதாயின். இது தானமும் தவமுங் கெடுமென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

மழை பெய்யாவிட்டால் அகன்ற இவ்வுலகில் தானம் செய்வதும் தவம் செய்வதும் ஆகிய இரண்டு அறங்களும் நடைபெறா.

Translation:

If heaven its watery treasures ceases to dispense, Through the wide world cease gifts, and deeds of 'penitence'.

Explanation:

If rain fall not, penance and alms-deeds will not dwell within this spacious world.

No comments:

Post a Comment