குறள் 85:
"வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்."
மு.வரதராசனார் உரை:
விருந்தினரை முன்னே போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ?.
சாலமன் பாப்பையா உரை:
விருந்தினர் முதலில் உண்ண, மிஞ்சியவற்றையே உண்பவனின் நிலத்தில் விதைக்கவும் வேண்டுமா?.
பரிமேலழகர் உரை:
விருந்து ஓம்பி மிச்சில் மிசைவான் புலம் - முன்னே விருந்தினரை மிசைவித்துப் பின் மிக்கதனைத் தான் மிசைவானது விளைபுலத்திற்கு; வித்தும் இடல் வேண்டுமோ - வித்திடுதலும் வேண்டுமோ? வேண்டா. ('கொல்' என்பது அசைநிலை. 'தானே விளையும்' என்பது குறிப்பெச்சம். இவை மூன்று பாட்டானும் விருந்து ஓம்புவார் இம்மைக்கண் எய்தும் பயன் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை:
விருந்தினரை ஊட்டி மிக்க வுணவை யுண்ணுமவன் புலத்தின் கண், விளைதற் பொருட்டு விதைக்கவும் வேண்டுமோ? தானே விளையாதோ? பொருள் வருவாயாக இயற்றுமிடம் நன்றாகப் பயன்படுமென்றவாறு.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
விருந்தினரைப் போற்றி உபசரித்து மீதியாக இருப்பதை உண்பவன் நிலத்திற்கு விதை இடுதலும் வேண்டுமோ?. விதைக்கு - (விதைக்க) - வைத்திருப்பதையும் சமைத்து உணவளிப்பான் என்பதாம்.
Translation:
Who first regales his guest, and then himself supplies,
O'er all his fields, un sown, shall plenteous harvests rise.
Explanation:
Is it necessary to sow the field of the man who, having feasted his guests, eats what may remain ?.
No comments:
Post a Comment