Tirukkuṛaḷ - திருக்குறள்

Wednesday, August 26, 2020

Tirukkural - குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: அடக்கமுடைமை.

 குறள் 122:

"காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு."

மு.வரதராசனார் உரை:

அடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு போற்றிக் ‌காக்க வேண்டும். அந்த அடக்கத்தைவிட மேம்பட்ட ஆக்கம் உயிர்க்கு இல்லை.

சாலமன் பாப்பையா உரை:

அடக்கத்தைச் செல்வமாக எண்ணிக் காக்க; அதைக் காட்டிலும் பெரிய செல்வம் வேறு இல்லை.

பரிமேலழகர் உரை:

உயிர்க்கு அதனின் ஊங்கு ஆக்கம் இல்லை - உயிர்கட்கு அடக்கத்தின் மிக்க செல்வம் இல்லை; அடக்கத்தைப் பொருளாகக் காக்க - ஆதலான் அவ்வடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு அழியாமல் காக்க. (உயிர் என்பது சாதியொருமை. அஃது ஈண்டு மக்கள் உயிர்மேல் நின்றது, அறிந்து அடங்கிப் பயன் கொள்வது அதுவே ஆகலின்.).

மணக்குடவர் உரை:

ஒருவன் தனக்குப் பொருளாக அடக்கத்தை யுண்டாக்குக. அவனுயிர்க்கு ஆக்கம் அதனின் மேற்பட்டது பிறிதில்லை.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

அடக்கத்தினை உறுதிப் பொருளாகக் கொண்டு அழியாமல் காத்தல் வேண்டும். ஏனெனில், மக்களுயிர்க்குச் செல்வாய் பெருக்கமானது அதனைவிடப் பிறிது யாதும் இல்லை.

Translation:

Guard thou as wealth the power of self-control;

Than this no greater gain to living soul!.

Explanation:

Let self-control be guarded as a treasure; there is no greater source of good for man than that.

No comments:

Post a Comment