Tirukkuṛaḷ - திருக்குறள்

Friday, August 21, 2020

Tirukkural - குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: அன்புடைமை.

 குறள் 74:

"அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பு என்னும் நாடாச் சிறப்பு."

மு.வரதராசனார் உரை:

அன்பு பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும்: அஃது எல்லாரிடத்தும் நட்பு என்றுசொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும்.

சாலமன் பாப்பையா உரை:

குடும்பம், உறவு என்பாரிடத்துக் கொள்ளும் அன்பு, உலகத்தவரிடம் எல்லாம் உறவு கொள்ளும் விருப்பை உண்டாக்கும். அதுவே அனைவரையும் நட்பாக்கும் சிறப்பையும் உண்டாக்கும்.

பரிமேலழகர் உரை:

அன்பு ஆர்வமுடைமை ஈனும் - ஒருவனுக்குத் தொடர்புடையார் மாட்டுச் செய்த அன்பு அத்தன்மையால் பிறர் மாட்டும் விருப்பமுடைமையைத் தரும்; அது நண்பு என்னும் நாடாச்சிறப்பு ஈனும் - அவ்விருப்பமுடைமைதான்.அவற்குப் பகையும் நொதுமலும் இல்லையாய் யாவரும் நண்பு என்று சொல்லப்படும் அளவறந்த சிறப்பினைத் தரும்.(உடைமை, உடையனாம் தன்மை. யாவரும் நண்பாதல் எல்லாப் பொருளும் எய்துதற்கு ஏதுவாகலின், அதனை 'நாடாச்சிறப்பு' என்றார்.).

மணக்குடவர் உரை:

அன்பு தரும் ஆர்வமுடைமையை அவ்வார்வமுடைமை தரும். நட்பென்று சொல்லப்பட்ட ஆராய்தலில்லாத சிறப்பினை.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

அன்பு என்பது பிறரிடத்தில் செல்லும் ஆர்வம் என்னும் விருப்பத்தினை உண்டாக்கும். ஆர்வம் என்னும் அந்த விருப்பம் நட்பு என்று சொல்லப்படுகின்ற அளவு கடந்த சிறப்பினைக் கொடுக்கும்.

Translation:

From love fond yearning springs for union sweet of minds;

And that the bond of rare excelling friendship binds.

Explanation:

Love begets desire: and that (desire) begets the immeasurable excellence of friendship.

No comments:

Post a Comment