Tirukkuṛaḷ - திருக்குறள்

Thursday, August 20, 2020

Tirukkural - குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: மக்கட்பேறு.

 குறள் 67:

"தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்."

மு.வரதராசனார் உரை:

தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்.

சாலமன் பாப்பையா உரை:

தகப்பன் தன் பிள்ளைக்குச் செய்யும் நன்மை, கற்றவர் அவையில் முதன்மைப் பெறச் செய்வதே.

பரிமேலழகர் உரை:

தந்தை மகற்கு ஆற்றும் நன்றி - தந்தை புதல்வனுக்குச் செய்யும் நன்மையாவது;அவையத்து முந்தி இருப்பச் செயல் - கற்றார் அவையின்கண் அவரினும் மிக்கு இருக்குமாறு கல்வியுடையன் ஆக்குதல். (பொருளுடையான் ஆக்குதல் முதலாயின துன்பம் பயத்தலின் நன்மை ஆகா என்பது கருத்து. இதனான் தந்தை கடன் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை:

தந்தை மகனுக்குச் செய்யும் உபகாரம் அவையத்தின் கண்ணே முந்தியிருக்குமாறு கல்வி யுண்டாக்குதல்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

தந்தை மகனுக்குச் செய்ய வேண்டிய நன்மை யாதென்றால் கற்றவர் நிறைந்த அவையில் அவரினும் சிறப்புற்று முற்பட்டிருக்குமாறு கல்வியுடையவனாகச் செய்தலாகும்.

Translation:

Sire greatest boon on son confers, who makes him meet,

In councils of the wise to fill the highest seat.

Explanation:

The benefit which a father should confer on his son is to give him precedence in the assembly of the learned.

No comments:

Post a Comment