Tirukkuṛaḷ - திருக்குறள்

Tuesday, August 25, 2020

Tirukkural - குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: நடுவு நிலைமை.

 குறள் 112:

"செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து."

மு.வரதராசனார் உரை:

நடுவுநிலைமை உடையவனின் செல்வவளம் அழிவில்லாமல் அவனுடைய வழியில் உள்ளார்க்கும் உறுதியான நன்மை தருவதாகும்.

சாலமன் பாப்பையா உரை:

நீதியை உடையவனின் செல்வம் அழியாமல் அவன் வழியினர்க்குப் பாதுகாப்பாக இருக்கும்.

பரிமேலழகர் உரை:

செப்பம் உடையவன் ஆக்கம் - நடுவு நிலைமையை உடையவனது செல்வம்; சிதைவு இன்றி எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து - பிறர் செல்வம் போல அழிவு இன்றி அவன் வழியிலுள்ளார்க்கும் வலியாதலை உடைத்து. (விகாரத்தால் தொக்க எச்ச உம்மையான் இறக்கும் துணையும் அவன்றனக்கும் ஏமாப்பு உடைத்து என்பது பெற்றாம். அறத்தோடு வருதலின், அன்னதாயிற்று. தான் இறந்தவழி எஞ்சி நிற்பதாகலின் 'எச்சம்' என்றார்.).

மணக்குடவர் உரை:

நடுவு நிலைமை யுடையவனது செல்வம் தன்னளவிலுங் கேடின்றியே நின்று, தன் வழியுள்ளார்க்குங் கேடுவாராமற் காவலாதலையுடைத்து. நடுவுநிலைமையுடையார் செல்வம் அழியாதென்றவாறு.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

நடுவு நிலைமையுடையவனது செல்வமானது அழிவில்லாமல் அவன் வழியில் வருவோர்க்குப் பாதுகாப்பான உறுதியாதலை உடையதாகும்.

Translation:

The just man's wealth un wasting shall endure,

And to his race a lasting joy ensure.

Explanation:

The wealth of the man of rectitude will not perish, but will bring happiness also to his posterity.

No comments:

Post a Comment