Tirukkuṛaḷ - திருக்குறள்

Wednesday, August 19, 2020

Tirukkural - குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்.

 குறள் 59:

"புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை."

மு.வரதராசனார் உரை:

புகழைக் காக்க விரும்பும் மனைவி இல்லாதவர்க்கு, இகழ்ந்து பேசும் பகைவர் முன் காளை போல் நடக்கும் பெருமித நடை இல்லை.

சாலமன் பாப்பையா உரை:

புகழை விரும்பிய மனைவியைப் பெறாதவர்க்கு அவர்களை ஏளனம் செய்வார் முன்னே ஆண் சிங்கமாய் நடக்கும் பெருமித நடை இல்லை.

பரிமேலழகர் உரை:

புகழ் புரிந்த இல் இலோர்க்கு - புகழை விரும்பிய இல்லாளை இல்லாதார்க்கு; இகழ்வார் முன் ஏறு போல் பீடுநடை இல்லை - தம்மை இகழ்ந்துரைக்கும் பகைவர்முன் சிங்க ஏறு போல நடக்கும் பெருமித நடை இல்லை. ('புரிந்த' என்னும் பெயரெச்சத்து அகரம் விகாரத்தால் தொக்கது. பெருமிதம் உடையானுக்குச் சிங்க ஏறு நடையான் உவமம் ஆகலின், 'ஏறுபோல்' என்றார். இதனால் தகைசான்ற சொல் காவா வழிப்படும் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை:

புகழ்பொருந்தின மனையாளை இல்லாதார்க்கு இல்லையாம்: தம்மை யிகழ்ந்துரைப்பார்முன் ஏறுபோல நடக்கும் மேம்பட்ட நடை. ஏறு நடை- அசைவும் தலையெடுப்பும் பொருந்திய நடை.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

புகழ்வதற்குரிய மனையாளைப் பெறாத இல்வாழ்வார்களுக்குத் தம்மை இகழ்ந்து பேசும் பகைவர் முன்னே ஆண்சிங்கம் போன்ற பெருமிதமான நடை இல்லை.


Translation:

Who have not spouses that in virtue's praise delight, They lion-like can never walk in scorner's sight.

Explanation:

The man whose wife seeks not the praise (of chastity) cannot walk with lion-like stately step, before those who revile them.

No comments:

Post a Comment