Tirukkuṛaḷ - திருக்குறள்

Monday, September 14, 2020

Tirukkural - குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: துறவறவியல். அதிகாரம்: மெய்யுணர்தல்.

 குறள் 351:

"பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு."

மு.வரதராசனார் உரை:

மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப் பிறவி உண்டாகும்.

சாலமன் பாப்பையா உரை:

பொய்யானவற்றை மெய் என்று எண்ணும் மயக்கத்தால் இழிவான பிறப்பு வரும்.

பரிமேலழகர் உரை:

[அஃதாவது,பிறப்பு வீடுகளையும் அவற்றின் காரணங்களையும் விபரீத ஐயங்களானன்றி உண்மையான் உணர்தல். இதனை வடநூலார் 'தத்துவ ஞானம்' என்ப. இதுவும் பற்றற்றான் பற்றினைப் பற்றியவாறு உளதாவது ஆகலின்,அக்காரண ஒற்றுமைபற்றித் துறவின்பின் வைக்கப்பட்டது.

பொருள் அல்லவற்றைப் பொருள் என்று உணரும் மருளான் ஆம் - மெய்ப்பொருள் அல்லவற்றை மெய்ப்பொருள் என்று உணரும் விபரீத உணர்வானே உளதாம், மாணாப் பிறப்பு - இன்பம் இல்லாத பிறப்பு. (அவ் விபரீத உணர்வாவது, மறுபிறப்பும், இருவினைப் பயனும், கடவுளும் இல்லை எனவும் மற்றும் இத்தன்மையவும் சொல்லும் மயக்க நூல் வழக்குகளை மெய்ந்நூல் வழக்கு எனத் துணிதல். குற்றியை மகன் என்றும் இப்பியை வெள்ளி என்றும் இவ்வாறே ஒன்றனைப்பிறிதொன்றாகத் துணிதலும் அது. 'மருள், மயக்கம், விபரீத உணர்வு, அவிச்சை' என்பன ஒருபொருட் கிளவி. நரகர், விலங்கு, மக்கள், தேவர் என்னும் நால்வகைப்பிறப்பினும் உள்ளது துன்பமே ஆகலின், 'மாணாப் பிறப்பு' என்றார். இதனால் பிறப்புத் துன்பம் என்பதூஉம், அதற்கு முதற்காரணம் அவிச்சை என்பதூஉம் கூறப்பட்டன.).

மணக்குடவர் உரை:

பொருளல்லாதவற்றைப் பொருளாகக் கொள்கின்ற மயக்கத்தினாலே உண்டாம்; மாட்சிமையில்லாத பிறப்பு. இது மெய்யுணருங்கால் மயக்கங் காண்பானாயின் பிறப்புண்டாமென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

மெய்ப்பொருள் அல்லாதவற்றை மெய்ப்பொருள் என்று உணரும் விபரீத உணர்வினால் துன்பம் நிறைந்த பிறப்பு உண்டாவதாகும்.

Translation:

Of things devoid of truth as real things men deem;-

Cause of degraded birth the fond delusive dream!.

Explanation:

Inglorious births are produced by the confusion (of mind) which considers those things to be real which are not real.

No comments:

Post a Comment