Tirukkuṛaḷ - திருக்குறள்

Saturday, September 19, 2020

Tirukkural - குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: குற்றங்கடிதல்.

 குறள் 439:

"வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை."

மு.வரதராசனார் உரை:

எக்காலத்திலும் தன்னை மிக உயர்வாக எண்ணி வியந்து மதிக்கக் கூடாது, நன்மை தராத செயலைத்தான் விரும்பவும் கூடாது.

சாலமன் பாப்பையா உரை:

எவ்வளவு பெரிதாக வளர்ந்தாலும் அகங்காரம் கொண்டு பெரிதாகப் பேசாதே; நாட்டுக்கும் ஆட்சிக்கும் நன்மை தராத செயல்களைச் செய்ய விரும்பாதே.

பரிமேலழகர் உரை:

எஞ்ஞான்றும் தன்னை வியவற்க - தான் இறப்ப உயர்ந்த ஞான்றும் மதத்தால் தன்னை நன்கு மதியாது ஒழிக, நன்றி பயவா வினை நயவற்க - தனக்கு நன்மை பயவா வினைகளை மனத்தால் விரும்பாது ஒழிக.

(தன்னை வியந்துழி இடமும் காலமும் வலியும் அறியப்படாமை யானும் , அறனும் பொருளும் இகழப்படுதலானும், எஞ்ஞான்றும் வியவற்க என்றும் கருதியது முடித்தே விடுவல் என்று அறம் பொருள் இன்பங்கள் பயவா வினைகளை நயப்பின், அவற்றால் பாவமும் பழியும் கேடும் வருமாகலின், அவற்றை 'நயவற்க' என்றும் கூறினார். இதனான், மத மானங்களின் தீமை கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை:

எல்லா நாளுந் தன்னைப் பெரியனாக நினைத்து வியவாதொழிக; வியந்தா னாயினும் அவ்வியப்பினானே நன்மை பயவாத வினையைச் செய்யாதொழிக. செய்யிற் கெடு மென்றவாறாயிற்று.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

செருக்கினால் எப்போதும் தன்னைத்தானே மதித்துக் கொள்ளாதிருப்பாயாக; தனக்கு நன்மையினை உண்டாக்காத தொழில்களை மனத்தால் விரும்பாதிருப்பாயாக.

Translation:

Never indulge in self-complaisant mood,

Nor deed desire that yields no gain of good.

Explanation:

Let no (one) praise himself, at any time; let him not desire to do useless things.

No comments:

Post a Comment