Tirukkuṛaḷ - திருக்குறள்

Tuesday, September 15, 2020

Tirukkural - குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: துறவறவியல். அதிகாரம்: அவாவறுத்தல்.

 குறள் 367:

"அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும்."

மு.வரதராசனார் உரை:

ஒருவன் ஆசையை முழுதும் ஒழித்தால், அவன் கெடாமல் வாழ்வதற்கு உரிய நல்ல செயல் அவன் விரும்புமாறு வாய்க்கும்.

சாலமன் பாப்பையா உரை:

ஆசையை முழுவதுமாக அறுத்து ஒழித்து விட்டால், தான் விரும்பும் வண்ணமே அழியாமல் வாழ்வதற்கான செயல் உண்டாகும்.

பரிமேலழகர் உரை:

அவாவினை ஆற்ற அறுப்பின் - ஒருவன் அவாவினை அஞ்சித் துவரக் கெடுக்க வல்லன் ஆயின், தவா வினை தான் வேண்டும் ஆற்றான் வரும் - அவனுக்குக் கெடாமைக்கு ஏதுவாகிய வினை, தான் விரும்பும் நெறியானே உண்டாம். (கெடாமை - பிறவித் துன்பங்களான் அழியாமை. அதற்கு ஏதுவாகிய வினை என்றது, மேற்சொல்லிய துறவறங்களை. 'வினை' சாதி யொருமை. தான் விரும்பும் நெறி மெய்வருந்தா நெறி. 'அவாவினை முற்ற அறுத்தானுக்கு வேறுஅறஞ்செய்ய வேண்டா, செய்தன எல்லாம் அறமாம்' என்பது கருத்து. இதனால் அவா அறுத்தற் சிறப்புக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை:

ஆசையை மிகவும் போக்குவானாயின், கேடில்லாத வினைதான் வேண்டின நெறியாலே வரும்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

ஒருவன் அவாவுக்கு அஞ்சி அதனை முழுதும் கெடுக்க வல்லவனானால், அவனுக்குக் கெடாமைக்குக் காரணமான வினை, தான் விரும்பும் நெறியாலே உண்டாவதாகும்.

Translation:

Who thoroughly rids his life of passion-prompted deed,

Deeds of unfailing worth shall do, which, as he plans, succeed.

Explanation:

If a man thoroughly cut off all desire, the deeds, which confer immortality, will come to him, in the path in which he seeks them.

No comments:

Post a Comment