Tirukkuṛaḷ - திருக்குறள்

Tuesday, September 15, 2020

Tirukkural - குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: துறவறவியல். அதிகாரம்: அவாவறுத்தல்.

 குறள் 363:

"வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
ஆண்டும் அஃதொப்பது இல்."

மு.வரதராசனார் உரை:

அவா அற்ற நிலைமை போன்ற சிறந்த செல்வம் இவ்வுலகில் இல்லை, வேறு எங்கும் அதற்க்கு நிகரான ஒன்று இல்லை.

சாலமன் பாப்பையா உரை:

எந்தப் பொருளையும் விரும்பாமல் இருப்பது போன்ற சிறந்த செல்வம் இப்பூமியில் வேறு ஒன்று இல்லை; வான் உலகத்திலும் இதற்கு ஒப்பானது இல்லை.

பரிமேலழகர் உரை:

வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டு இல்லை - ஒரு பொருளையும் அவாவாமையை ஒக்கும் விழுமிய செல்வம் காணப்படுகின்ற இவ்வுலகின்கண் இல்லை, ஆண்டும் அஃது ஒப்பது இல் -இனி அவ்வளவேயன்று, கேட்கப்படுகின்ற துறக்கத்தின்கண்ணும் அதனை ஒப்பது இல்லை. (மக்கள் செல்வமும் தேவர் செல்வமும் மேன்மேல் நோக்கக் கீழாதல் உடைமையின், தனக்கு மேலில்லாத வேண்டாமையை 'விழுச்செல்வம்' என்றும், அதற்கு இரண்டு உலகினும் ஒப்பதில்லை என்றும் கூறினார். ஆகம அளவை போலாது காட்சி அளவை எல்லாரானும் தெளியப்படுதலின், மக்கள்செல்வம் வகுத்து முன்கூறப்பட்டது. பிறவாமைக்கு வழியாம் எனவும், விழுச்செல்வமாம் எனவும் வேண்டாமையின் சிறப்பு இவ்விரண்டு பாட்டானும் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை:

அவாவின்மை போல மிக்க செல்வம் இவ்விடத்தில் இல்லை: அவ்விடத்தினும் அதனை யொப்பது பிறிதில்லை. இஃது இதனின் மிக்கதொரு பொருளுமில்லை யென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

'எப்பொருளையும் விரும்பாமை' என்பதனை ஒக்கும் சிறந்த செல்வம் இவ்வுலகின் கண் இல்லை. அதுவேயன்றி எவ்வுலகிலும் அதனை ஓப்பது இல்லை.

Translation:

No glorious wealth is here like freedom from desire;

To bliss like this not even there can soul aspire.

Explanation:

There is in this world no excellence equal to freedom from desire; and even in that world, there is nothing like it.

No comments:

Post a Comment