Tirukkuṛaḷ - திருக்குறள்

Tuesday, September 15, 2020

Tirukkural - குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: ஊழியல். அதிகாரம்: ஊழ்.

 குறள் 371:

"ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி."

மு.வரதராசனார் உரை:

கைப்பொருள் ஆவதற்க்கு காரணமான ஊழால் சோர்வில்லாத முயற்சி உண்டாகும், கைப்பொருள் போவதற்க்கு காரணமான ஊழால் சோம்பல் ஏற்படும்.

சாலமன் பாப்பையா உரை:

பணம் சேர்வதற்கு உரிய விதி நமக்கு இருந்தால், சேர்ப்பதற்கான முயற்சி உண்டாகும். இருப்பதையும் இழப்பதற்கான விதி இருந்தால் சோம்பல் உண்டாகும்.

பரிமேலழகர் உரை:

[அஃதாவது, இருவினைப்பயன் செய்தவனையே சென்றடைதற்கு ஏதுவாகிய நியதி. ஊழ், பால், முறை, உண்மை, தெய்வம், நியதி, விதியென்பன ஒருபொருட்கிளவி. இது பொருள் இன்பங்கள் இரண்டிற்கும் பொதுவாய் ஒன்றனுள் வைக்கப் படாமையானும், மேற்கூறிய அறத்தோடு இயைபு உடைமையானும், அதனது இறுதிக்கண் வைக்கப்பட்டது.]

கைப்பொருள் ஆகுஊழால் அசைவு இன்மை தோன்றும் - ஒருவற்குக் கைப்பொருளாதற்குக் காரணமாகிய ஊழான் முயற்சி உண்டாம்; போகு ஊழால் மடி தோன்றும் - அஃது அழிதற்குக் காரணமாகிய ஊழான் மடி உண்டாம். (ஆகூழ், போகூழ் என்னும் வினைத்தொகைகள் எதிர்காலத்தான் விரிக்கப்பட்டுக் காரணப்பொருளவாய் நின்றன. அசைவு -மடி. பொருளின் ஆக்க அழிவுகட்குத் துணைக்காரணமாகிய முயற்சி மடிகளையும் தானே தோற்றுவிக்கும் என்பது கருத்து.).

மணக்குடவர் உரை:

ஒருவனுக்கு ஆக்கங் கொடுக்கின்ற ஊழ் தோன்றினால் முயற்சி தோன்றும்; அழிவு கொடுக்கின்ற ஊழ் தோன்றினால் மடிதோன்றும். இஃது ஆக்கத்திற்கும் கேட்டிற்கும் ஏதுவான முயற்சியும் முயலாமையும் ஊழால் வருமென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

ஒருவருக்குக் கைப்பொருள் ஆவதற்குக் காரணமான ஊழினால் முயற்சியானது தோன்றும். பொருள் அழிவதற்குக் காரணமான ஊழினால் சோம்பல் தோன்றும்.

Translation:

Wealth-giving fate power of unflinching effort brings;

From fate that takes away idle remissness springs.

Explanation:

Perseverance comes from a prosperous fate, and idleness from an adverse fate.

No comments:

Post a Comment