Tirukkuṛaḷ - திருக்குறள்

Tuesday, September 15, 2020

Tirukkural - குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: துறவறவியல். அதிகாரம்: அவாவறுத்தல்.

 குறள் 365:

"அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
அற்றாக அற்றது இலர்."

மு.வரதராசனார் உரை:

பற்றற்றவர் என்றுக் கூறப்படுவோர் அவா அற்றவரே, அவா அறாத மற்றவர் அவ்வளவாகப் பற்று அற்றவர் அல்லர்.

சாலமன் பாப்பையா உரை:

ஆசை இல்லாதவரே எதுவும் இல்லாதவர்; மற்றவரோ முழுவதும் இல்லாதவர் ஆகார்.

பரிமேலழகர் உரை:

அற்றவர் என்பார் அவா அற்றார் - பிறவியற்றவர் என்று சொல்லப்படுவார் அதற்கு நேரே ஏதுவாகிய அவா அற்றவர்கள், மற்றையார் அற்றாக அற்றது இலர் - பிற ஏதுக்களற்று அஃது ஒன்றும் அறாதவர்கள், அவற்றால் சில துன்பங்கள் அற்றதல்லது அவர்போற் பிறவி அற்றிலர். (இதனால் அவா அறுத்தாரது சிறப்பு விதிமுகத்தானும் எதிர்மறைமுகத்தானும் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை:

பற்றற்றவரென்பார் ஆசையற்றவரே; ஆசையறாதவர் பற்றினையறுத்தாராயினும் ஆசையற்றாரைப் போலப் பற்றறுதலிலர்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

பிறவியற்றவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் அதற்கு நேர்க்காரணமான அவா அற்றவர்களாவர். மற்ற எல்லாம் நீங்கி அது ஒன்று மட்டும் நீங்காதவர்கள் சில துன்பங்கள் அற்றவர்களேயல்லாமல் பிறவி அற்றவர்களாகார்.

Translation:

Men freed from bonds of strong desire are free;

None other share such perfect liberty.

Explanation:

They are said to be free (from future birth) who are freed from desire; all others (who, whatever else they may be free from, are not freed from desire) are not thus free.

No comments:

Post a Comment