Tirukkuṛaḷ - திருக்குறள்

Tuesday, September 1, 2020

Tirukkural - குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: பயனில சொல்லாமை.

குறள் 192:

"பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலிற் றீது."

மு.வரதராசனார் உரை:

பலர் முன்னே பயனில்லாத சொற்களைச் சொல்லுதல், நண்பரிடத்தில் அறம் இல்லா செயல்களைச் செய்தலை விடத் தீமையானதாகும்.

சாலமன் பாப்பையா உரை:

ஒருவன் பலருக்கும் முன்னே பயனற்ற சொற்களைச் சொல்வது, நண்பர்களுக்குத் தீமை செய்வதைக் காட்டிலும் கொடியது.

பரிமேலழகர் உரை:

பயன் இல பல்லார்முன் சொல்லல் - பயன் இலவாகிய சொற்களை அறிவுடையார் பலர் முன்பே ஒருவன் சொல்லுதல், நயன் இல நட்டார்கண் செய்தலின் தீது - விருப்பம் இலவாகிய செயல்களைத் தன் நட்டார் மாட்டுச் செய்தலினும் தீது. ('விருப்பமில' - வெறுப்பன. இச் சொல் அச்செயலினும் மிக இகழற்பாடு பயக்கும் என்பதாம்.).

மணக்குடவர் உரை:

பயனில்லாத சொல்லைக் கொண்டாடுவானை மகனென்னாதொழிக; மக்களில் பதரென்று சொல்லுக, இது மக்கட் பண்பிலனென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

விரும்பத்  தகாத செயல்களை நண்பர்களிடம் செய்வதை விடப் பயனொன்றும் இல்லாத சொற்களை அறிவுடையார் பலர் முன்னே ஒருவன் சொல்லுதல் தீதானதாகும்.

Translation:

Words without sense, where many wise men hear, to pour

Than deeds to friends ungracious done offendeth more.

Explanation:

To speak useless things in the presence of many is a greater evil than to do unkind things towards friends

No comments:

Post a Comment