Tirukkuṛaḷ - திருக்குறள்

Friday, August 14, 2020

Tirukkural - குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: வான்சிறப்பு.

 குறள் 13:

"விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி."

மு.வரதராசனார் உரை:

மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்.

சாலமன் பாப்பையா உரை:

உரிய காலத்தே மழை பெய்யாது பொய்க்குமானால், கடல் சூழ்ந்த இப்பேருலகத்தில் வாழும் உயிர்களைப் பசி வருத்தும்.

பரிமேலழகர் உரை:

விண் இன்று பொய்ப்பின் - மழை வேண்டுங்காலத்துப் பெய்யாது பொய்க்கும் ஆயின்; விரி நீர் வியன் உலகத்துள் - கடலால் சூழப்பட்ட அகன்ற உலகத்தின்கண்; நின்று உடற்றும் பசி - நிலை பெற்று உயிர்களை வருத்தும் பசி. (கடலுடைத்தாயினும் அதனால் பயன் இல்லை யென்பார், 'விரி நீர் வியன் உலகத்து' என்றார். உணவு இன்மையின் பசியான் உயிர்கள் இறக்கும் என்பதாம்.).

மணக்குடவர் உரை:

வானமானது நிலைநிற்கப் பொய்க்குமாயின், விரிந்த நீரினையுடைய அகன்ற வுலகத்திடத்தே பசியானது நின்று வருத்தாநிற்கும், எல்லாவுயிர்களையும். பொய்த்தல்- தன்றொழில் மறுத்தல். இது பசி என்று பொதுப்படக் கூறியவதனான் மக்களும் விலங்கும் பொருளுங் காமமுந் துய்க்கலாற்றாது துன்ப முறுமென்று கூறிற்று.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

மழையானது வேண்டுங் காலத்தில் பெய்யாமல் இருந்துவிட்டால், கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் பசியானது நின்று எல்லா உயிர்களையும் துன்புறுத்தும்.

Translation:

If clouds, that promised rain, deceive, and in the sky remain, Famine, sore torment, stalks o'er earth's vast ocean-girdled plain.

Explanation:

If the cloud, withholding rain, deceive (our hopes) hunger will long distress the sea-girt spacious world.

No comments:

Post a Comment