Tirukkuṛaḷ - திருக்குறள்

Tuesday, September 1, 2020

Tirukkural - குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: பயனில சொல்லாமை.

 குறள் 200:

"சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்."

மு.வரதராசனார் உரை:

சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்லவேண்டும், பயன் இல்லாதவைகளாகிய சொற்களை சொல்லவே கூடாது.

சாலமன் பாப்பையா உரை:

சொற்களில் அறம், பொருள், இன்பம் ஆகிய பயன்தரும் சொற்களையே சொல்லுக; பயனற்ற சொற்களைச் சொல்லவேண்டா.

பரிமேலழகர் உரை:

சொல்லில் பயன் உடைய சொல்லுக - சொற்களில் பயன் உடைய சொற்களைச் சொல்லுக, சொல்லில் பயனில்லாச் சொல் சொல்லற்க - சொற்களில் பயன் இல்லாத சொற்களைச் சொல்லாது ஒழிக. ('சொல்லில்' என்பது இருவழியும் மிகையாயினும், சொற் பொருட் பின்வருநிலை என்னும் அணி நோக்கி வந்தது. "வைகலும் வைகல் வரக்கண்டும்" (நாலடி 39) என்பது போல. இதனால் சொல்லப்படுவனவும் படாதனவும் நியமிக்கப்பட்டன.).

மணக்குடவர் உரை:

சொல்லுவனாயின் பயனுடைய சொற்களைச் சொல்லுக: சொற்களிற் பயனில்லாத சொற்களைச் சொல்லா தொழிக. இது பயனில சொல்லாமை வேண்டுமென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

சொற்கள் பலவற்றுள்ளும் பயன்தரக்கூடிய சொற்களைச் சொல்லுவாயாக; சொற்களில் பயனேதும் இல்லாத சொற்களைச் சொல்லாதிருப்பாயாக.

Translation:

If speak you will, speak words that fruit afford,

If speak you will, speak never fruitless word.

Explanation:

Speak what is useful, and speak not useless words.

No comments:

Post a Comment