Tirukkuṛaḷ - திருக்குறள்

Tuesday, September 1, 2020

Tirukkural - குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: பயனில சொல்லாமை.

 குறள் 199:

"பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்."

மு.வரதராசனார் உரை:

மயக்கத்திலிருந்து தெளிந்த மாசற்ற அறிவை உடையவர், பயன் நீங்கிய சொற்களை ஒருகால் மறந்தும் சொல்லமாட்டார்.

சாலமன் பாப்பையா உரை:

மயக்கமற்ற தூய அறிவினை உடையவர், பொருளற்ற சொற்களை மறந்தும் சொல்லார்.

பரிமேலழகர் உரை:

பொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் - பயனின் நீங்கிய சொற்களை மறந்தும் சொல்லார், 'மருள் தீர்ந்த' மாசுஅறு காட்சியவர் - மயக்கத்தின் நீங்கிய தூய அறிவினையுடையார். "('தூய அறிவு' மெய்யறிவு. 'மருள் தீர்ந்த' என்னும் பெயரெச்சம் காட்சியவர் என்னும் குறிப்புப்பெயர் கொண்டது. இவை மூன்று பாட்டானும் பயன்இல சொல்லாமையின் குணம் கூறப்பட்டது).

மணக்குடவர் உரை:

பொருளில்லாத சொல்லை மறந்துஞ் சொல்லார்; மயக்கந் தீர்ந்த குற்றமற்ற தெளிவினை யுடையார், இது தெளிவுடையார் கூறாரென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

அஞ்ஞானத்திலிருந்து நீங்கிய தூய அறிவினையுடைய பெரியோர்கள், பயனில்லாத சொற்களை மறந்தும் சொல்லமாட்டார்கள்.

Translation:

The men of vision pure, from wildering folly free,

Not e'en in thoughtless hour, speak words of vanity.

Explanation:

Those wise men who are without faults and are freed from ignorance will not even forgetfully speak things that profit not.

No comments:

Post a Comment