Tirukkuṛaḷ - திருக்குறள்

Friday, September 4, 2020

Tirukkural - குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: துறவறவியல். அதிகாரம்: புலான்மறுத்தல்.

 குறள் 256:

"தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்."

மு.வரதராசனார் உரை:

புலால் தின்னும் பொருட்டு உலகத்தார் உயிர்களைக் கொல்லா திருப்பாரானால், விலையின் பொருட்டு ஊன் விற்பவர் இல்லாமல் போவார்.

சாலமன் பாப்பையா உரை:

தின்பதற்காகவே கொலை செய்பவர் இல்லை என்றால், இறைச்சியை விலைக்குத் தருபவரும் உலகில் எங்கும் இருக்கமாட்டார்.

பரிமேலழகர் உரை:

தினற்பொருட்டால் உலகு கொல்லாது எனின் - பேதைமை காரணமாக அல்லது, ஊன் தின்கை காரணமாக உலகம் கொல்லாதாயின், விலைப்பொருட்டு ஊன் தருவார் யாரும் இல் - பொருள் காரணமாக ஊன் விற்பார் யாவரும் இல்லை. ('உலகு' என்பது ஈண்டு உயிர்ப்பன்மை மேல் நின்றது. பின் நிகழும் தின்கை முன் நிகழும் கொலைக்குக் காரணம் ஆகாமையின், 'தின்பார்க்குக் காரணத்தான் வரும் பாவம் இல்லை' என்ற வாதியை நோக்கி அருத்தாபத்தி அளவையால் காரணமாதல் சாதித்தலின், இதனான் மேலது வலியுறுத்தப்பட்டது.).

மணக்குடவர் உரை:

தின்னுதற்காக உலகத்தார் கொள்ளாராயின், விலைக்காக ஊன் விற்பார் யாரும் இல்லை. இது கொன்று தின்னாது விலைக்குக்கொண்டு தின்பார்க்குக் குற்றமென்னை யென்றார்க்கு அதனாலுங் கொலைப்பாவம் வருமென்று கூறிற்று.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

ஊன் தின்னுவதன் காரணமாக உலகம் கொல்லாதாயின் விலைப் பொருட்டால் (பொருள் காரணமாக) ஊன் தருபவர்கள் யாரும் இல்லை. விற்பவர்கள் யாரும் இல்லை.

Translation:

'We eat the slain,' you say, by us no living creatures die;

Who'd kill and sell, I pray, if none came there the flesh to buy?.

Explanation:

If the world does not destroy life for the purpose of eating, then no one would sell flesh for the sake of money.

No comments:

Post a Comment