Tirukkuṛaḷ - திருக்குறள்

Wednesday, September 2, 2020

Tirukkural - குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: ஒப்புரவறிதல்.

 குறள் 214:

"ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்."

மு.வரதராசனார் உரை:

ஒப்புரவை அறிந்து போற்றிப் பிறர்க்கு உதவியாக வாழ்கின்றவன் உயிர்வாழ்கின்றவன் ஆவான், மற்றவன் செத்தவருள் சேர்த்துக் கருதப்படுவான்.

சாலமன் பாப்பையா உரை:

உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவுபவனே உயிரோடு வாழ்பவன். உதவாதவன் இருந்தாலும் இறந்தவனாகவே எண்ணப்படுவான்.

பரிமேலழகர் உரை:

உயிர் வாழ்வான் ஒத்தது அறிவான் - உயிரோடு கூடி வாழ்வானாவான் உலக நடையினை அறிந்து செய்வான், மற்றையான் செத்தாருள் வைக்கப்படும் - அஃதறிந்து செய்யாதவன் உயிருடையானே யாயினும் செத்தாருள் ஒருவனாகக் கருதப்படும்.(உயிரின் அறிவும் செயலும் காணாமையின், 'செத்தாருள் வைக்கப்படும்' என்றார். இதனான் உலகநடை வழு வேத நடை வழுப்போலத் தீர்திறன் உடைத்து அன்று என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை:

ஒப்புரவறிவான் உயிர்வாழ்வானென்று சொல்லப்படுவன். அஃதறியான் செத்தவருள் ஒருவனாக எண்ணப்படுவன். இஃது ஒப்புரவறியாதார் பிணத்தோ டொப்ப ரென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

உயிரோடு கூடி வாழ்பவன் என்பவன் உலக நடையினை அறிந்து வாழ்பவனாவான். அவ்வாறு அறிந்து வாழாதவன் செத்தவர்களுள் ஒருவனாக வைத்துக் கருதப்படுவான்.

Translation:

Who knows what's human life's befitting grace,

He lives; the rest 'mongst dead men have their place.

Explanation:

He truly lives who knows (and discharges) the proper duties (of benevolence). He who knows them not will be reckoned among the dead.

No comments:

Post a Comment