Tirukkuṛaḷ - திருக்குறள்

Thursday, September 3, 2020

Tirukkural - குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: துறவறவியல். அதிகாரம்: அருளுடைமை.

 குறள் 243:

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்."

மு.வரதராசனார் உரை:

அறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகில் இருந்து வாழும் வாழ்க்கை, அருள் பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு இல்லை.

சாலமன் பாப்பையா உரை:

அருள் நிறைந்த நெஞ்சத்தவர்க்கு, இருட்டான, துன்ப உலகமாகிய நரகம் புகும் நெருக்கடி இல்லை.

பரிமேலழகர் உரை:

இருள் சேர்ந்த இன்னா உலகம் புகல் - இருள் செறிந்த துன்ப உலகத்துள் சென்று புகுதல், அருள் சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை - அருள் செறிந்த நெஞ்சினை உடையார்க்கு இல்லை. ('இருள் செறிந்த துன்ப உலகம்' என்றது, திணிந்த இருளை உடைத்தாய்த் தன் கண்ணே புக்கார்க்குத் துன்பம் செய்வதோர் நரகத்தை, அது கீழுலகத்துள் ஓர் இடம் ஆகலின், 'உலகம்' எனப்பட்டது.).

மணக்குடவர் உரை:

அருளைப் பொருந்தின நெஞ்சினையுடைவர்க்கு இருளைப் பொருந்தின நரகலோகம் புகுதலில்லை. இது நரகம் புகாரென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

இருள் நிறைந்த துன்ப உலகத்தில் சென்று புகுதல் என்பது அருள் நிறைந்த நெஞ்சினையுடையவர்களுக்கு இல்லை.

Translation:

They in whose breast a 'gracious kindliness' resides,

See not the gruesome world, where darkness drear abides.

Explanation:

They will never enter the world of darkness and wretchedness whose minds are the abode of kindness.

No comments:

Post a Comment